முகம் – ஆரோக்கியம் சொல்லும் கண்ணாடி

நம்ம கடை

Shop Here for Green Gifts

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்பது பழமொழி.

இந்த பழமொழியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன. முகம் அழகாக தோன்ற வேண்டுமானால் உடலில் உள்ளே உள்ள உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நம் முகம் – ஆரோக்கியம் சொல்லும் கண்ணாடி.

இன்றைய காலத்தில் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடம், பொருள் இதன் பட்டியலில் அழகும் இடம் பிடித்து விட்டது. எனவே உடலை நன்கு பராமரித்தால்தான் இயற்கையான உண்மையான அழகை பெற முடியும்.

இன்றைய நவீன உலகில் உணவு மாறுபாடு காரணமாக முகமும், சருமமும் பாதித்த நிலையிலேயே பலர் காணப்படுகின்றனர். நம் உடலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் எத்தனை மெனக்கிட்டாலும் சில வேளைகளில் நம்மை அறியாமல் சில ஆபத்தான ரசாயன சாதனங்களை அழகுக்காக பயன் படுத்திக் கொள்கிறோம். கூடவே அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது ‘ஒவ்வாமை’.

அதேபோல் எத்தனை கோடி சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் முழுவதும் புண் வைத்துக்கொண்டு பட்டு துணியில் சட்டை போட்டாலும் மனதில் தெம்பு இருக்குமா? நிச்சயம் இருக்காது. அகத்தில் வஞ்சனையும், பொறாமையும், அடுத்தவர்களை கெடுக்கும் துர்புத்தியும் இருந்தாலும் உடல் என்ற கோவிலில் இருந்து சந்தோஷம் என்கிற இறைவன் வெளியேறி விடுகிறான்.

இதனால் அழகாக பிறந்தவர்களும் தனக்கதானே சூனியம் வைத்துக் கொள்வது போல தங்களுடைய தீய எண்ணத்தால் பாதிப்படைகிறார்கள். அவர்களின் முகமும் வசீகரம் இல்லாமல் பேய் பிடித்தது போல மாறிவிடுகிறது. இது ஒரு வித தாழ்வு மனப்பான்மை மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்படுகிறது. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் அழகு கூடும்.

தன்னம்பிக்கை

அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அது உள்ளம் தொடர்புடையது. எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும். உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும். 

ஆரோக்கியமான உடல்நிலை

உணர்வுகள் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை கூட அழகாய் இருப்பதற்கு தேவைப்படுகிறது. அழகான மென் உணர்வுகளைப் பெற நல்ல தேக ஆரோக்கியம் மிக அவசியமாகும். நல்ல ஆரோக்கியம் என்பது திடகாத்திரமாக சுறுசுறுப்பானவர்களாக இயங்குவதேயாகும். இது சுறுசுறுப்பு நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் மூலமே பெற முடியும். நல்ல ஆரோக்கியத்தைப் பெற முதலில் மன அமைதியைத் பெறுவது மிக முக்கியம்.

மனத் தெளிவு தரும் யோகா

யோகாசனம்  மன அமைதியைக் கொடுக்கும். எல்லா யோகாசனங்களை செய்ய முடியாவிட்டாலும் ஓரிடத்தில் அமர்ந்து மூச்சை உள்வாங்கி மெல்ல வெளியே விடலாம். அதைத் தொடர்ந்து 15, 20 நிமிடம் வரை செய்து வருவதால் மன அமைதி கிடைக்கும். அலைபாயும் நினைவுகள் கட்டுக்கடங்கி முகம் அமைதியை வெளிக்கொணரும். பதற்றம் தணியும். உள்ளழகு பளிச்சென வெளிவரும். முகமும் உடலும் புத்துயிர் பெறும்.

மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும் அழகின் முதல் படியாகும். துடைக்கத் துடைக்கத் தான் கண்ணாடி பளபளப்பாகும். அதேபோல் நம் முகம், கை கால், உடல் போன்றவற்றை அடிக்கடி நல்ல முறையில் பேணி வந்தால் நாளடைவில் சகல உறுப்புகளும் பொலிவு பெறும்.

இதேபோல் மனதையும் கவனித்து அமைதி இழக்காது பாதுகாப்பது அதை விடச் சிறந்ததாகும். ஏனெனில் அமைதியில்லாத மனதில் முக அழகு ஏற்படாது. சோகமோ சந்தோஷமோ முகமானது மன அழகை பளிச்சென எடுத்துக்காட்டும். இந்த சக்தி கண்களுக்கும் உண்டு. உங்களைப் பற்றிய நம்பிக்கை, உடல்களைப் பற்றி ஓர் உயர்ந்த அபிப்பிராயம், நல்ல நினைவுகள் இல்லாமல் போகும் பட்சத்தில் அழகாக இருக்கிறோம் என்ற நினைப்பிற்கே இடமில்லை.

முகமெனும் கண்ணாடி

அகத்தில் உள்ள பதிப்புகளை முகம் என்னும் கண்ணாடி பளிச்சென எடுத்துக் காட்டுகிறது. முகத்தில் வெளிப்படும் அடையாளங்களை இனி சுலபமாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உடலை பாதுகாப்போம். 

புள்ளிகள், கருப்பு திட்டுகள், பருக்கள்

புள்ளிகள், கருப்பு திட்டுகள், பருக்கள் போன்றவை முகத்தில் எந்த இடத்தில் தோன்றுகிறது என்பதை பொருத்து உடல் உறுப்பில் எங்கு என்ன பாதிப்பு என்பதை சுலபமாக அறியலாம். உடலில் மட்டுமல்லாது மனதிலும் ஏற்படும் குழப்பங்களை இது வெளிப்படுத்துகிறது.

கீழ் கன்னம்

கீழ் கன்னத்தில் புள்ளியோ, பருக்களோ தோன்றினால் அது நுரையீரல், சுவாச சம்பந்தமான தொந்தரவுகளை வெளிபடுத்துகிறது. சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவருக்கும் சோகத்தில் துயரத்தில் இருப்பவர்களுக்கும் இந்த இடத்தில் பருக்கள் உருவாகும். 

வாய் ஓரங்களில், கண்விழிக்கு கீழ், புருவ மத்தி

வாய் ஓரங்களில், கண்விழிக்கு கீழ், புருவ மத்தியில் புள்ளிகள் தோன்றினால் அது கல்லீரல் சம்பந்தமான தொந்தரவு. மலச்சிக்கல், தசைநார் வலி, மாதவிடாய் வலி, கண்வழி, அதிகப்படியான நச்சு சேர்ந்தால், மன அழுத்தம், அதிகப்படியான கோபம் மற்றும் விரக்தியை  பிரதிபலிக்கிறது. 

மேல் கன்னங்கள் அல்லது மூக்கு

மேல் கன்னங்கள் அல்லது மூக்கில் பருக்கள் புள்ளிகள் தோன்றினால் உடலில் உருவான அதிகசூடையும், இதய சமநிலையின்மையையும் வெளிபடுத்துகிறது. நீடித்த சுய விருப்பமின்மையும் வெறுப்பும், பதட்டம், பரபரப்பு போன்ற திடீர் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது.

உதடு, வாய், புருவம் மத்தி, கண்களின் கீழ், தாடை ஓரம்

உதடு, வாய், புருவ மத்தி, கண்களின் கீழ், தாடை ஓரம் ஆகிய இடங்களில் புள்ளிகள் தோன்றினால் அது வயிறு மற்றும் மண்ணீரலில் ஏற்பட்டுள்ள தொந்தரவுகளை வெளிபடுத்துகிறது. அஜீரணக் கோளாறினால் ஏற்படும் கெட்ட சுவாசம், IBS, வயிறு வீக்கம், பசியின்மை, இரத்த சோகை, கவலை போன்ற உடல் தொந்தரவுகளை வெளிப்படுத்துகிறது.

கன்னம், கீழ் கண்கள் மற்றும் காது

கன்னம், கீழ் கண்கள் மற்றும் காதுகளில் பருக்கள் வெளிப்பட்டால் அது சிறுநீர்ப்பை, சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள தொந்தரவின் காரணமாக. முடி உதிர்தல், இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள், எலும்பு பலவீனம், பயம் போன்ற உடலின் மொழியை வெளிபடுத்துகிறது.

கீழ் கன்னத்தின் ஓரம்

கீழ் கன்னத்தின் ஓரங்களில் புள்ளிகள் வெளிப்படுமானால் பெருங்குடல் பாதிப்பை அது வெளிப்படுத்துகிறது. சுவாச சம்பந்தமான தொந்தரவுகளையும், மலச்சிக்கல் தொந்தரவுகளையும், மனது ஏதோ இனம் புரியாது சிக்கி தவிப்பதையும் வெளிபடுத்துகிறது.

மேல் நெற்றி ஓரத்திலும், புருவ மத்தி

மேல் நெற்றி ஓரத்திலும், புருவ மத்தியின் ஓரத்திலும் புள்ளிகள், பருக்கள் தோன்றினால் பித்தப்பையின் பதிப்பையும், கூச்சம், கோழைத்தனம் போன்ற உணர்ச்சியையும் குறிக்கிறது. அதிக மாமிசம், எண்ணெய் பலகாரம்,  மசாலா பொருட்கள் உட்கொள்வதால் இந்த பாதிப்பு உருவாகும்.  

இப்படி புள்ளிகள், பருக்கள், கருப்பு திட்டுக்கள் மட்டும் அகத்தை வெளிப்படுத்துவதில்லை. முகத்தில் நிற மாறுதலும் பல வகைகளில் அகத்தின் மொழியை வெளிபடுத்துகிறது.  

ஊதா நிறத்தில் முகம் அல்லது கீழ் கண்

ஊதா நிறத்தில் முகம் அல்லது கீழ் கண் மாறினால் போதிய தூக்கம் இல்லாமல் உடலில் உள்ள நீர் சத்துக்கள் குறைந்ததையும், சிறுநீர்ப்பை மற்றும் அட்ரீனல் சுரப்பி சமநிலையின்மையையும் அது வெளிப்படுத்தும். மஞ்சள் நிறத்தில் மாறினால் சீரான இரத்த ஓட்டம், ஜீரண மண்டல பாதிப்பை குறிக்கிறது. சிவப்பு நிற புள்ளிகள் அல்லது தட்டுகள் முகத்தில் தோன்றினால் அது ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறது.

உண்ட உணவில் உள்ள நச்சினால் இரத்த ஓட்டம் பாதிப்பு, இருதய சமநிலையின்மையை வெளிபடுத்துகிறது. அதே போல் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது முதுமையினால் இல்லை, உடலில் ஏற்பட்டுள்ள வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளின் குறைபாட்டினால் தான். 

உணவு முறை 

  • இந்த புள்ளிகள், பருக்கள், நிறங்களின் வெளிப்பாடுகளின் மூலம் உள் உறுப்புகளின் மொழியை அறிந்து அவற்றிற்கு ஏற்ற உணவையும், பராமரிப்பையும் செய்வோமானால் உடலும், முகமும் பளபளக்கும். 
  • வாரம் ஒரு முறையாவதும் இயற்கையில் விளைந்த  மஞ்சளை (இயற்கை கிருமி நாசினி) பூசி குளித்து வர உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதுடன் முகம் பளிச்சிடும்.
  • இயற்கையில் விளைந்த கீரைகள், நீர்க் காய்கள் (சுரை, புடலை, பூசணி, வெள்ளரி), பழங்கள், கொட்டை பருப்புகள்  போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துவருவது, உடலில் உள்ள கழிவுகளை வெளித்தள்ளி உடலையும் மனதையும் ஆரோக்கியமானதாக வைக்கும்.
  • ரசாயன குளியல் கட்டிகளை பயன்படுத்தாது மூலிகை பொடிகளை பயன்படுத்துவது சீரான இரத்த ஓட்டத்தை கொடுக்கும். 
  • வாரம் ஒரு முறை மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வர உடலுக்கு தேவையான வைட்டமின்களை பெற உதவும். 
  • அதிக மிளகாய் காரம், புளி போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது. 
  • அழகான தோற்றம் கொண்ட ஒருவர் பிறரையும் சந்தோஷப்படுத்துகிறார். தன்னம்பிக்கை கொண்டவராக புன்னகையுடன் அவர் வலம் வரும் போது பார்ப்பவர்கள் பரவசம் கொள்கிறார்கள். அவரது உள்மன அழகை தெளிவான புன்னகை எடுத்துக்காட்டுகிறது.
  • மனதில் அமைதியும் அடக்கமும் இருந்தால், முகமும் உடலும் அழகு பெறும் அப்படியான முகத்திற்கு அலங்காரமே தேவையில்லை. சாதாரண முக அலங்காரம் போதுமானது.

மேலும் நகங்கள் சொல்லும் நோய் அறிகுறியையும் தெரிந்துக் கொள்வோம்.

(3 votes)