tirumurai-tirupathigam

கல்வி அறிவு பெற – பலன் தரும் திருமுறை திருப்பதிகம்

வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈசனாகிய சிவபெருமானை நம் மனதில் இருத்தி கல்வி அறிவு பெற பாட வேண்டிய திருப்பதிகம்

ஏழாவது வயதில் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அவரது தந்தையார். உபநயன சடங்கு ( பூணூல் இடுதல்) செய்யும் பொருட்டு வேதியர்களை வரவழைத்து அச்சடங்கினை செய்து முடித்தார். அவ்வேதியர்கள் அதிசயிக்கும்படி அவர்களின் முன்பு, பல வேதங்களை தன் திருவாயால் பொலிந்தார் திருஞானசம்பந்தர், அதனை கேட்டு வியந்த வேதியர்கள் தங்களுக்கு வேதங்களில் உள்ள சந்தேகங்களை எல்லாம் கேட்டு தெளிந்தனர். பின்பு திருஞானசம்பந்தப் பெருமான் வேதங்களுக்கு எல்லாம் மூலமாக விளங்குவது “நமசிவாய” என்ற திருஐந்தெழுத்தே யாகும் என்பதை உணர்த்த “துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்” எனத் தொடங்கும் திருஐந்தெழுத்து திருப்பதிகத்தை அருளினார். அவ்வேதியர்க்கு தெளிந்த அறிவினை நல்கும்படி பாடிய இப்பதிகமே மாணவ செல்வங்கள் சிறந்த கல்வி அறிவு பெற பாட வேண்டிய திருப்பதிகம் ஆகும்.

tirumurai-tirupathigam

சீர்காழி

திருமுறை – 3/22

இறைவன் – பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி

பண் – காந்தாரபஞ்சகம்

திருச்சிற்றம்பலம்

துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. 1

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. 2

ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்
தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 3

நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்
தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 4

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே. 5

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. 6

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே. 7

வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே. 8

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன அஞ்செ ழுத்துமே. 9

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திர மாவன அஞ்செ ழுத்துமே. 10

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே. 11

திருச்சிற்றம்பலம்

(1 vote)