tirumurai-tirupathigam

நோய் தீர – பலன் தரும் திருமுறை திருப்பதிகம்

நோய் வாராது நம்மை காக்கவும், நோய் அகலவும் ஓதவேண்டிய பதிகம்

பாண்டி நாட்டு மன்னவனாகிய நெடுமாறன் மதுரையை
தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார். அவருக்கு மிகக் கடுமையான சுரம் (காய்ச்சல்) ஏற்பட்டது. அவர் சார்ந்திருந்த சமண மத குருமார்களால் குணப்படுத்த முடியாத நிலையில் திருஞானசம்பந்தர், அம்மன்னவனின் உடலில் திருநீற்றினை “மந்திரமாவது நீறு” எனத் தொடங்கும் இத்திருப்பதிகத்தை பாடியவாறே மன்னவன் மீது பூச சுர நோய் நீங்கியது. உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் உயிரை பிடித்திருக்கும் பிறவி என்ற நோயை தீர்க்கும் அருமருந்து திருநீறு ஆகும் நோயுற்றவர்க்கு முன் இத்திருப்பதிகத்தை பாடியவாறே நம்பிக்கையுடன் அவர்கள் மீது திருநீறு பூசவும். இதுவே அவர்களுக்கு செய்யும் முதல் உதவியாகும். தினமும் இப்பதிகத்தை பாடி வரும் அன்பர்க்கு இத்திருப்பதிகம் கவசம் போல் காப்பது உறுதி.

tirumurai-tirupathigam

திருஆலவாய் (மதுரை)

திருமுறை : 2/66

இறைவன் : சொக்கநாதர் – மீனாட்சி

பண்: காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.   1

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.   2

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.   3

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.   4

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.   5

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.   6

எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே.   7

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே.   8

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே.   9

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே.   10

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.   11

திருச்சிற்றம்பலம்